Saturday, September 13, 2014

கணபதி புராண வரலாறு



சுவேத கல்பத்தில் ஒரு சமயம் பார்வதிதேவி நீராடச் செல்லும் வேலையில் தமக்கு ஜெயா விஜயா என்ற இரு பெண் மெய்க்காவலர்கள் இருந்தபோதும் உண்மையான மெய்க்காவலரின் தேவையினை உணர்ந்தார். எனவே தமது உடலில் இருந்த அழுக்கினைத் திரட்டி உருவமாகப் படைத்து மெய்க்காவலராக வாயிலில் நியமித்தார்.


இப்புதிய மெய்க்காவலர் (கணபதி) கண்டிப்பும் பலமும் பெற்றவர். இவருக்கு நீராடச் சென்றுள்ள தேவியின் இடத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே கணபதி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் சிவபெருமான் பார்வதி தேவியை காண வந்தார். வழியில் நின்றிருந்த கணபதி சிவனை இடைமறித்தார். தாங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். சிவன் உள்ளே செல்ல முயன்றார்.

கணபதி சிவனை அறியாதவர். சிவன் கணபதியை அறியாதவர். ஆகவேஇ கணபதி மறுக்க விவாதம் ஏற்பட்டு யுத்தமாக மாறியது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமான் தமது மெய்க்காவலர்களை அழைத்து கணபதியை அப்புறப்படுத்த முனைந்தார். சிவனின் மெய்க்காவலர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். சிவனுக்காக சுப்பிரமணியரும் விஷ்ணுவும் சென்றனர். கடவுளர்களும் ரிஷிகளும் சென்றனர். அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். சிவபெருமானும் மற்ற கடவுளர்களும் திகைப்படைந்தனர். என்ன செய்வதென்று அறியாத நிலையில் விஷ்ணு (மாயவன்) தமது மாய வியூகத்தினால் கணபதியை அழிக்க முயன்றார். இதனை அறிந்த பார்வதி தமது பெண் மெய்காவலர்களை யுத்தம் நடைபெறுமிடத்திற்கு அனுப்பினார். அதற்குள் கணபதியின் தலை துண்டிக்கப்பட்டது.
இச் செய்தியினை நாரதர் மூலம் அறிந்த பார்வதிதேவி கடுஞ்சினமடைந்தார். கணபதியின் தலையினைத் துண்டித்தவர்களை அழிக்க ஆயிரம் பெண் தெய்வங்களைப் படைத்தார். இப்பிரபஞ்சம் அதிர்ந்தது கடவுளர்களும் தேவர்களும் ரிஷிகளும் நடுங்கினர். ரிஷிகளும் நாரதரும் தேவியை கைகூப்பி வணங்கி அமைதி காத்தருளுமாறு வேண்டி தாங்கள் தங்களைப் பொருத்தருளுமாறும் வேண்டினர். அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு தேவி கணபதி மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதனையறிந்த சிவபெருமான் மற்றுமுள்ள விஷ்ணு சுப்பிரமணியர் ஆகியோர் ஆலோசித்தனர். இறுதியில் சிவபெருமான் கடவுளர்களை அழைத்து வடக்குத் திசை நோக்கிச் செல்லுங்கள் எதிரில் எந்த உயிரினம் தென்படுகிறதோ அதன் தலையினைக் கொய்து கணபதியின் கழுத்தில் பொறுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறு சென்ற போது யானை தென்பட அதன் தலையை பொறுத்தப்படுகிறது. யானையின் (கஜா) தலையைப் பொறுத்தியிருப்பதால் கஜானனன் என்றழைக்கப்பட்டார்.

உயிர்த்தெழுந்த கணபதியைக் கண்டு பார்வதிதேவி மனமகிழ்ந்தார். சிவனும் மற்ற கடவுளர்களும் நிம்மதியடைந்தனர். இப் பிரபஞ்சம் பழைய நிலைக்கு வந்தது. சிவனுடைய பூதகணப்படைகளை விரட்டியடித்து பேராற்றல் பெற்ற கணபதியைச் சிவன் அனுக்கிரகம் செய்தார். ஈஸ்வரரின் அனுக்கிரகம் பெற்றதால் விக்கேஸ்வரானுக்கிரகமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். அன்று முதல் பூதகணங்களுக்கெல்லாம் தலைவராக சிவாலயங்களில் முதன்மையானவராக முதல் வணக்கத்துக்குரிய கடவுளாக போற்றப்படுகிறார்.

No comments:

Post a Comment