Wednesday, January 28, 2015

சரஸ்வதி மகிமை



ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது.
இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு.
வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்த பொறுப்பை ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்திதேவியையும் வணங்கி ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள்.
“பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?” என்று கடும் கோபம் அடைந்தார் ஒட்டக்கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் எதையும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து அரசர் தந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார். ஒட்டக்கூத்தரின் ஒத்துழைப்பு இல்லாததை பற்றி கம்பர் கவலைப்படவில்லை.
ஆனால் ஒட்டக்கூத்தரோ விரோத மனதுடன் இருந்ததால் அந்த நேரத்தில் அவருக்கு சரஸ்வதிதேவியின் அருளும் கருணை பார்வையும் முழுமையாக கிடைக்கவில்லை. வால்மீகி ராமாயணத்தை ஒட்டக்கூத்தர் தனியாக இயற்றினாலும் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஞானம் இருந்தால் மட்டும் போதாது. கர்வம் இருக்கக் கூடாது. கர்வம் உள்ள மனதில் எந்த யோகமும் தங்காது. அதுவும் சரஸ்வதி தேவி, வெள்ளை நிறத்தை விரும்கிறவள். அந்த வெள்ளை நிறத்தில் ஒரு சிறு கறை பட்டாலும் அது மிகவும் பளிச்சென்று தெரியும். அதுபோல் தன்னுடைய அருளால் கல்வியறிவு பெற்றவர்கள், கர்வத்தோடு இருந்தால் அது சரஸ்வதிதேவிக்கு பிடிக்காமல் அவர்களின் மேல் கோபப் பார்வை செலுத்துவார். இதனால் ஞானம் கிடைத்தாலும் அதன் மூலமாக பெருமை கிடைக்காது.
வால்மீகி இராமாயணத்தை இயற்றியவர்
சோழ அரசர் ஒருநாள், “இராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும். கம்பர் மட்டும்தான் இராமாயண காவியத்தை அதிக அளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து, கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்க முடியாத ஒட்டக்கூத்தர், “அரசே…இனி கம்பரே இராமாயண காவியம் எழுதி முடிக்கட்டும்.” என்று கூறி சொல்லி விலகி கொண்டார்.
இராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவிய பாடல்களாக பாடினார் கம்பர். சரஸ்வதியின் அருள் பெற்றவராக கம்பர் திகழ்ந்ததால், சபையில் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதை கண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி சரஸ்வதி தேவியின் அருள் இருந்தால்தான் எந்த கலைகளும் எளிதாக வரும். அதில் புகழ் பெறுவார்கள். நன்மை தீமைகளை சிந்திக்கும் ஆற்றலும், தைரியசாலியாகவும் இருப்பார்கள். கற்ற கல்வியின் பயனால் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
சரஸ்வதியின் அருள் பெற அன்பான உண்மையான பக்தியுடன் வழிப்பட்டு அதன் பயனால் சிறந்த கல்வி அறிவு பெறலாம்.

No comments:

Post a Comment