Tuesday, April 14, 2015

தமிழ் வருட பிறப்பு 2015


ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.

எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு.

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.

தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.

சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.

வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

மருத்து நீர் :

இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது.

இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

ஆடை :

பச்சை நிறப் பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புதிய பட்டாடையையும், மரகதம் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தில் வெண் மஞ்சள் பட்டாடை அல்லது மஞ்சள் கரைவைத்த வெள்ளைப் புத்தாடையையும் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அறுசுவை உணவு :

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

கைவிஷேடம் :

சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.

மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

சித்திரைப் புதுவருடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழாவாக இங்கு சிறப்புப் பெறுவதுடன், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தாலும் கொண்டாடுவதில் சில தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

சமாதானம் சந்தோஷம் ஆகியவற்றை சுமந்து வெள்ளைநிற வண்டியில் வரும் இந்திரதேவ குமரனின் வருகையினை கொண்டாடும் விதத்திலேயே சித்திரை புத்தாண்டை சிங்கள பெளத்தர்கள் கொண்டாடுவதாக வரலாறு கூறுகின்றது. புத்தாண்டு பிறக்கும் செய்தியினை ‘குயில்’ தன் குரலால் உலகறியச் செய்வதாக நம்பப்படுகின்றது.

சிங்கள மக்கள் தமது புதுவருடத்தில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் அதற்கான சுபநேரத்தில் அரிசி இடித்து அடுப்புக்கட்டி பலகாரம் சுடுவதுடன் ஆரம்பிக்கப்படுவது வழக்கமாகும்.அடுத்ததாக பழைய வருடத்திற்கான ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நோக்கி இடம்பெறும் இந்த குளியில் பழைய வருடத்திற்கான இறுதிக் குளியலாகும். புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர் மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து மருந்து எண்ணை வைத்து குளிப்பார்கள். விகாரைக்கு சென்று வழிப்பட்டு புத்தாண்டு பிறப்பு நேரத்தில் பட்டாசு கொளுத்துவர். புத்தாடை உடுத்தி பால் பொங்குதல், பால்சோறு சமைத்தல் அத்துடன் தின்பண்டங்கள் தயாரித்தலில் ஈடுபடுவர். இத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர்கள். இப் படையலில் முக்கியமாக பால்சோறு இருக்கும்.

நல்ல நேரத்தில் குத்து விளக்கேற்றி ஊதுவர்த்தி கொழுத்தி சாம்பிராணிப் புகைப் பிடிப்பர். குடும்பத்துடன் உணவு பரிமாறி உண்பர். அயலவர்களிடமும் உணவு பரிமாறிக்கொள்வர். பெரியோரை மதித்து வணங்குவர் அத்துடன் கைவிசேடம் பெறுவர். புண்ணியக் காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாக கொடுக்கல் வாங்கல்கள் செய்வர். ஒரு சம்பிரதாயத்திற்காக தத்தமது வேலை/தொழில் செய்வர். பின்னர் அநேகமானோர் புத்தர் விகாரைகளிற்கு “பன” (பௌத்த உரை) கேட்பதற்காகவும் வேறு விசேட நிகழ்வுகளுக்காகவும் செல்வர்.

இப் புண்ணியக் காலம் முடிந்தப் பிறகு, புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் “றபான்” அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின், இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதி்க்கேற்ப வைத்துக்கொள்வர்.

சிங்கள பெளத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. நீண்ட காலமாக பகைமை கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை பார்க்கச் சென்று பகைமை தீர்த்துக் கொள்ளப்படும்.

கலை கலாச்சார நிகழ்வுகள் :

நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.

இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.

புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது.

குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும். புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.

புதுவருடம் பிறந்ததன் பின் பஞ்சாங்க கணிப்பின்படி சுப தினத்தில் சுப நேரத்தில் தொழிலிலுக்குச் செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாரும், ஆரம்ப காலத்தில் முற்றத்தில் விளக்கேற்றி வைத்து, அதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மண்வெட்டியைக் கொண்டு வீட்டின் தந்தை மண்ணை வெட்டி கத்தியால் ஒரு பிலா மரத்தின் கிளையினை வெட்டுவதே வழக்கத்தில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்தந்த ஆண்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட வர்ண உடைகளை அணிந்து, சுப திசை சுப நேரம் ஆகியவற்றுக்கு அமைய அலுவலகத்திற்குச் செல்வதே வழக்கமாகி விட்டது.
வருடப்பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்தநாள்.

அதை நம் மனம் போல மாற்றிக் கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியுமா? அதுபோலத்தான். நாம் என்றைக்குப் பிறந்தோம் என்பதை நம் பெற்றோர் சொன்னதைக் கேட்டுத்தான் நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் பிறந்தது முதல் நம் பெற்றோர் நம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு வரவே, நம்முடைய பிறந்த நாள் என்றைக்கு வருகிறது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே வருஷம் பிறக்கும் நாளை சித்திரை மாதத்தில் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கொண்டாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அதை அப்படியே பின்பற்றி, சித்திரை மாதத்தில் கொண்டாடுவதுதான் சரியான செயலாகும்.

பிறந்த நாள் என்பதே ஜோதிடம் சம்பந்தப்பட்டது. இப்பொழுதெல்லாம் நாம் ஆங்கில மாதம், ஆங்கிலத் தேதி என்று பின்பற்றி வந்தாலும், குழந்தை பிறந்தவுடன், ஜோதிடரிடம் சென்று அந்தத் தேதியில் என்ன நாள், என்ன நட்சத்திரம் என்று கேட்டுக் கொண்டுதான், பிறந்த நாளை நிர்ணயம் செய்கிறோம். அந்தக் குழந்தை நல்ல ஆயுசுடனும், அமோகமாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நட்சத்திரத்தில்தான் ஆயுஷ் ஹோமம் செய்கிறோ.ம். கோவிலில் அர்ச்சனையும் செய்கிறோம். இதே முறையில் தமிழ் வருஷப் பிறப்பும் அமைந்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருஷப் பிறப்பு :

உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன. அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.

இதில் தமிழ் வருஷப் பிறப்பு, தெலுங்கு வருஷப்பிறப்பு என்று வித்தியாசங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். இரண்டும் ஒன்றுதான், தெலுங்கு வருஷப் பிறப்பை ‘யுகாதி’ என்று சொல்வதிலிருந்து சதுர் யுகம் ஆரம்பித்த முதல் நாளையே அது குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். சதுர் யுகம் ஆரம்பித்த நேரத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருந்தனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது அமாவாசை ஆகும். அதற்கு மறுதினமான வளர்பிறை பிரதமையில் யுகங்கள் ஆரம்பித்தன. அது மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு அனைத்துக் கிரகங்களும் அதே இடத்தில், மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் சந்தித்துக் கொள்வதில்லை.

ஒவ்வொறு கிரகத்துக்கும் இருக்கிற வேக வித்தியாசத்தால் இப்படி இருக்கிறது. தமிழ் நாட்டில் சூரியனது நிலையை மட்டுமே நாம் கணக்கில் கொள்கிறோம், தெலுங்கர்கள் உட்பட பிற மாநிலத்தவர்கள் சந்திரன் இருந்த இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிழைவதற்கு முன், சூரியனும், சந்திரனும் சேரும் நாளின் அடிப்படையில் அவர்கள் வருடப் பிறப்பு கொண்டாடவே, தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டுக்கும், மற்ற மாநிலத்தவர் கொண்டாடும் யுகாதிப் பண்டிகைக்கும் சிறிது வித்தியாசம் வருகிறது. ஆனால் இரண்டுமே சித்திரையில் சூரியன் நுழைவதை முன்னிட்டுக் கணக்கிடப்படுகின்றன.

No comments:

Post a Comment